Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, April 8, 2011

R.V Visit

 

”பிடில் சுந்தர சாஸ்திரிகள்ங்கிற பெரியவர் ஒருத்தர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, ‘அவருக்கு ரொம்ப வயசாயிடுத்து. பாவம்… சிரமப்படறார். இனிமே நீ ஏத்துண்டு நடத்து’ன்னார். பெரியவா சொன்னபடி, கலவை கிராமத்துல சுமார் ஐம்பது வருஷமா, விடாம நடத்திண்டு வரேன். மகாபெரியவாளும் அந்த விழாவுல நிறைய முறை கலந்துண்டிருக்கா..!” – சிலிர்ப்புடன் விவரித்த பட்டு சாஸ்திரிகள், எந்த முன் அனுபவமும் இல்லாமல், பெரியவாளின் அனுக்கிரகத்தால் மட்டுமே சமாளித்து, நல்ல பேரெடுத்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.

”சுமார் 40, 45 வருஷங்கள் இருக்கும். பாதயாத்திரை கிளம்பின மகாபெரியவா, சோளிங்கபுரத்துல வந்து தங்கினா. அது, மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்திரம். அங்கே ஆஞ்சநேயர் ஆலயமும் உண்டு. ரொம்ப விசேஷமான தலம் அது.

மகாபெரியவா அங்கு முகாமிட்டிருக்கிறதைத் தெரிஞ்சுண்ட முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், அவர் மனைவி ஜானகி, ஆந்திர தேசத்தோட ஐ.ஜி. ராமநாதன் எல்லோரும் அங்கே வந்திருந்தா. வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு எல்லாரும் மகாபெரியவாளைத் தரிசிக்க வந்துட்டா.

ஸ்ரீகண்டன்னு ஒருத்தர், மடத்தைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மகாபெரியவாளுக்கு பிக்ஷை பண்ணிப் போடுவது வழக்கம். அவர், பெரியவாளுக்கு மட்டும்தான் பி¬க்ஷ பண்ணுவார்; அது மட்டும்தான் அவரோட வேலை.

ஆனா, அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ”என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையோ! நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு”ன்னார்.

அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டேன். பின்னே… எனக்கு சமைக்கவே தெரியாது. ‘எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவா என்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா, அவர்கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது. வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப் பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டார்னு தெரியும். அதனால அவரே இந்தக் காரியத்துக்கும் ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.

சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம் வெஞ்சனமும் வாங்கிண்டேன்.

அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக்கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத்தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.

அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி!’ன்னு எடுத்துக்கச் சொன்னார் பெரியவா.

ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.

கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக்கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன். வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக்கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.

‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவாகிட்ட சொல்லி, கையக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான். ‘இது மகாபெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்கிரகம்தான், என்னைக் காப்பாத்தித்து!

சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவாகிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப்போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.

”ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!”ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. ”அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பட்டு சாஸ்திரிகள்.

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top