Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, October 3, 2017

Explanations about Nataraja - Periyavaa

இத்தனை விஷயங்களா? என்று நம்மை மலைக்க வைக்கும் !  ஸர்வஜ்ஞரான மஹா பெரியவா நடராஜா பற்றிச் ​சொன்னது.
 
சிவன் கோவில்ல எல்லாம் "வ்யாகரண தான மண்டபம்"ன்னு ஒரு மண்டபம் இருக்கும். "வக்காணிக்கும் மண்டபம்" ன்னு திரிச்சு சொல்லுவா. நன்னா வக்கணையா பேசுன்னு சொல்றதே "இலக்கண சுத்தமா"பேசறதுன்னு அர்த்தம். திருவொற்றியூர்ல கூட இந்த மண்டபம் இருக்கு. சிவன் கோவில்ல மட்டும் ஏன் இப்டி ஒரு மண்டபம் இருக்கு? விஷ்ணு கோவில்ல ஏன் இல்லை? ஸிவனுக்கும் பாஷைக்கும் என்ன ஸம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியா இருக்கறவராச்சே பரமேஸ்வரன்? ஒரு ஸ்லோகத்ல, பேசாத சிவன் ஆடாம அசங்காமத்தான் இருப்பார். ஆனா, அவரே ஒரே ஆட்டமா ஆடறப்போ தான் பாஷா சாஸ்திரமே பொறந்ததுன்னு சொல்லியிருக்கு. ஆடகின்ற சிவனுக்கு நடராஜான்னு பேர். 'மஹாகாலோ மஹாநட:'ன்னு அமரகோசம் சொல்றது. அம்பலக்கூத்தாடுவான் பட்டன் ன்னு ப்ராஹ்மணாளும் ஆதியில நல்ல தமிழ் பேராத்தான் வெச்சிண்டிருந்திருக்கா. பம்பாய்ல ஒரு பிரிண்டிங் ப்ரஸ்ல [நிர்ணயஸாகரா பிரஸ்] பழைய காலத்து ஸம்ஸ்க்ருத ஸாஸனங்களை ஆராய்ச்சி பண்ணின புஸ்தகம் "ப்ராசீன லேகமாலை"ன்னு ஒண்ணு இருக்கு. அந்த ஸாஸனங்கள்ள வேங்கி நாட்டோடது ஒண்ணு இருக்கு. க்ருஷ்ணா நதிக்கும், கோதாவரிக்கும் நடுவுல இருக்கறது தான் வேங்கிநாடு. அந்த நாட்ல கெடச்ச தாம்ர [காப்பர்] ஸாஸனம் ஒண்ணை புஸ்தகத்ல போட்டிருக்கா. தெலுங்கு சீமைல ராஜ்யம் பண்ணிண்டிருந்த கீழை சாளுக்ய ராஜாக்களுக்கும், நம்ம தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்துது. ப்ருஹதீஸ்வரர் கோவிலைக் கட்டின ராஜராஜ சோழனோட புத்ர வம்ஸம், பௌத்ரர்களோடேயே முடிஞ்சு போய்டுத்து. அவனோட தௌஹித்ரி [பெண்வழிப் பேத்தி] அம்மங்கா தேவி, ராஜராஜ நரேந்த்ரன்….ங்கற கீழைச் சாளுக்ய ராஜாவுக்குத்தான் வாக்கப்பட்டிருந்தா. அவாளோட புள்ளை குலோத்துங்க சோழன்தான் அப்றம் சோழ நாட்டுக்கு ராஜா ஆனது. அவன் தான் ஆந்த்ர தேஸத்ல வேதாத்யயனம் வ்ருத்தியாகணும்னு, தமிழ்நாட்டுலேர்ந்து 500 ப்ராஹ்மணாளைக் கொண்டு போய் வேங்கிநாட்டுல குடியமத்தினான். ஆந்த்ரால "த்ராவிடலு" ன்னு இன்னிக்கும் இருக்கறவா எல்லாருமே இந்த 500 ப்ராஹ்மணாளோட வம்ஸாவளிதான். நடராஜாவைப் பத்தி சொல்லிண்டிருந்தேன்.. நாமெல்லாம் ஆட வேண்டிய கூத்தையெல்லாம் சேர்த்து வெச்சு அவர் ஆடறார். நடராஜ விக்ரஹத்தோட தலேல படர்ந்தா மாதிரி ஒண்ணு இருக்கும். ரெண்டு பக்கமும் நீண்டுண்டு இருக்கும். அதுல சந்த்ரன், கங்கை ரெண்டுமே இருக்கும். என்னது அது? 

அதுதான் நடராஜாவோட ஜடாபாரம். இந்தக் காலத்ல photo எடுக்கறச்சே. "snap shot "ன்னு ஒண்ணு உண்டு. ஒரு வஸ்து சலனத்ல [movement] இருக்கறப்போ, திடீர்னு ஒரு அவஸரத்ல [pose] போட்டோ எடுக்கறதுதான் அது. நடராஜா ரொம்ப வேகமா நர்த்தனம் பண்றார். பண்ணி, அப்டி நிறுத்தப்போற ஸமயத்ல அவரோட ஜடாபாரம் ரெண்டு பக்கமும் நீட்டிண்டு இருக்கும். அந்த அவஸ்தையை [கோலத்தை], அந்தக் காலத்து ஶில்பி, மனஸ்ல எடுத்த "ஸ்நாப் ஷாட்"தான் அந்த ஸ்வரூபம். நடராஜாவோட கையில உடுக்கு இருக்கு. அது குடுகுடுப்பாண்டி வெச்சிருக்கறதை விடப் பெருஸ்ஸு, மாரியம்மன் கோவில் பூஜாரி வெச்சிண்டு இருக்கறதை விட சின்னது. அதுக்கு டக்கான்னும், டமருகம்ன்னும் பேர் உண்டு. பாதத்தோட தாளத்தை அனுஸரிச்சு, அந்த டமருவோட தாளமும் இருக்கும்.

வாத்யங்கள்ள மூணு வகை. சர்ம வாத்யம் [டக்கா, மேளம், கஞ்சிரா, ம்ருதங்கம் மாதிரி தோல் வாத்யங்கள்], தந்த்ரி வாத்யம் [வீணை, பிடில் மாதிரி தந்தி [கம்பி] போட்டது] வாயுரந்த்ர வாத்யம் [நாயனம், புல்லாங்குழல் மாதிரி ஓட்டை போட்டு, காத்துனால ஊதற வாத்யம்]. 

இதுல சர்ம வாத்யம் தண்டத்தாலேயோ, ஹஸ்தத்தாலேயோ[கைகள்] அடிப்பா. அந்த வாத்யத்தை நிறுத்தறச்சே, சாப்பு குடுக்கறது, அப்டீன்னா… சேர்ந்தாப்ல சில அடி அடிக்கறது வழக்கம். அது மாதிரி நடராஜாவோட டமருகத்ல டான்ஸ் முடியற காலத்ல "ந்ருத்த அவஸானே" ன்னு ஒரு சாப்பு த்வனி உண்டாச்சு.

நடராஜா ந்ருத்யம் பண்றார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர் எல்லாரும் அவரைச் சுத்தி நிக்கறா. அவாள்ளாம் மஹா தபஸ்விகள். அதுனால நடராஜாவோட ந்ருத்தத்தை கண்ணால பாக்க முடிஞ்சுது. ஞான நேத்ரம் இருக்கறவாதான் அவரோட நடனத்தைப் பாக்க முடியும். க்ருஷ்ணனோட 
விஸ்வரூபத்தை தர்ஸனம்  பண்ற சக்தியை  பகவானே அர்ஜுனனுக்குக் குடுத்தார். அதே  சக்தியை வ்யாஸாச்சார்யாள் ஸஞ்சயனுக்கும் குடுத்து அவனையும் பகவானோட விஸ்வரூபத்தை தர்ஸனம் பண்ணி த்ருதராஷ்ட்ரனுக்கு வர்ணிக்கப் பண்ணினார். நடராஜாவோட டான்ஸ் கச்சேரில விஷ்ணு 
மத்தளம் கொட்டிண்டிருக்கார்; ப்ரஹ்மா தாளம் போட்டுண்டிருக்கார். இப்டியா…. ந்ருத்தம் முடியப் போற ஸமயத்ல, டமருகத்ல சாப்பு, கிடுகிடுன்னு 14  சப்தங்களா விழுந்துது. அந்த  சப்தங்களோட கணக்கு மாதிரியே வித்தைகளோட கணக்கும் பதினாலாத்தான் இருக்கு! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தஸ வித்யா [14] ன்னா….. நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது! அப்போ அங்கே இருந்தவாள்ள பாணினி மஹரிஷிங்கறவர் அந்த 14  சப்தங்களையும், 14 ஸூத்ரங்களா வ்யாகரணத்துக்கு மூலமா வெச்சுண்டு "அஷ்டாத்யாயி" ங்கற இலக்கண மூல புஸ்தகத்தை எழுதினர். இந்த பதினாலு ஸூத்ரங்களையும் ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்போம். மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ​ஸ் ​
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்… இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்… பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்.
 
​ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர                                                  ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர

Saturday, September 30, 2017

"திருமஞ்சனம் என்றால் என்ன?

கட்டுரையாளர்;டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு)
தொகுப்பு;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாரயணன்.
நன்றி;வானதி பதிப்பகம்.

ஒருசமயம் திருப்பதியில் ஏழுமலையானைத்
தரிசித்து பேரானந்தம் அடைந்தேன். அரசு உயர்
அதிகாரியாதலால், வேங்கடவன் மஹாப்ரசாதம்
(ஸ்ரீபாதரேணுகம்) சந்தனம் தந்தார்கள். அன்று
முன்னிரவிலேயே சிவாஸ்தானம் திரும்பி
குருதேவருக்குப் பிரசாதங்களை அர்ப்பணித்தேன்.
அகமகிழ்ந்து எடுத்து அணிந்தார்.

நான் சொன்னேன், "வேங்கடவன் எப்போதும்
ஏராளமான ஆபரணங்களை அணிந்து குண்டாக
குட்டையாகத் தோற்றமளிப்பார். இன்று
புருஷ ஸூக்தம்-திருநாமங்கள் ஜபித்து
அபிஷேகம் செய்தபோது ஒல்லியாக 
நெடிதுயரமாகக் காட்சி தந்தார்.எப்போதும்
நிலையற்றுத் தாவிக் கொண்டிருக்கும் என்
மந்தி மனத்தில் இன்று அசாதாரணமாக ஒரே
பிரார்த்தனை நிறைந்திருந்தது.

ஸ்ரீ பெரியவாள் கேட்டார்; நீ தமிழில் கவிஞன்
ஆயிற்றே.அபிஷேகம் என்றா,அங்கே சொன்னார்கள்?"

"திருமஞ்சனம் என்றார்கள்" எனப் பதில் பகிர்ந்தேன்.

தொடர்ந்து, "திருமஞ்சனம் என்றால் என்ன தெரியுமா?"
என்று அருளாளர் வினவினார்.

"பெரியவாள் சொல்லித் தெரிந்துகொள்கிறேன்"
என்று பணிவுடன் கூறினேன்.

"அஞ்சனம்னா எண்ணெய் தடவறது,
மெய் அஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் தடவறது.
திருமெய் அஞ்சனம்னா பகவான் திருமேனிக்கு
எண்ணெய் தடவறது.

திருமெய் அஞ்சனம்தான் மருவி திருமஞ்சனம்
ஆயிடுத்து" என விளக்கினார்.

இரு செவிகள் வழியே இதயத்தில் இன்பத்தேன் பாய்ந்தது.

Thursday, September 28, 2017

"நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி"


சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நன்றி;வானதி பதிப்பகம்.

பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால்
இவரைத்தான் சொல்ல வேண்டும்.

கஞ்ச மகா பிரபு!

காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க
மனம்தான் இல்லை.

பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.

வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு
உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும்
ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே
வந்திருக்கு.ரொம்பக் கஷ்டமா இருக்கு.
பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."

"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"

"செய்யறேன்."

"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."

"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்....
பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி
நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம்
என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று
சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத
கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு
சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?

பெரியவாள் சொன்னார்கள்.

1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடை
யதுதானே' என்று சொந்தம் கொண்டாடி,கிணறே
தண்ணிரைக் குடித்துவிடுவதில்லை.

2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்;
நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச்
சாப்பிடுவதில்லை.

3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால்
குடிப்பதில்லை.

4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன
ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக்
கொள்வதில்லை.

-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட,
பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு
என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு
உபகாரம் செய்யணும்?"

"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக 
அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.

"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து
வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது.
பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்."

"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ?
குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி,ஏழைகளுக்கு
உதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல
காரியங்களிலே பணத்தைச் செலவிடணும்.அப்புறம்...
வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து
வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை
நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி,
அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."

கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார்,
பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம்
ஜீவித்திருந்தார்.

பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும்
"நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின்
உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்.

Wednesday, September 27, 2017

"ஒண்ணு உனக்கு..இன்ணொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு....!"


கட்டுரையாளர்;பாரதி,வை,ராமச்சந்திரன்
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

நன்றி; வானதி பதிப்பகம்.

1971-ஆம் வருடம். மகாப் பெரியவாள் தஞ்சையில் முகாம்.

நாள்தோறும் கல்யாண வைபோகம்தான்!

சாரி சாரியாக (ஆமாம்,புடைவை,புடைவையாகத்தான்)
பெண்கள்.

சுவாஸினி பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு, காமாட்சியம்மன் திருவுருவம்
பொறித்த பொற்காசு ஒன்றை,ஒவ்வொருவருக்கும்
அருளுகிறார்கள் பெரியவாள்.புடைவைத் தலைப்பை
நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துக்
கொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து
பெற்றுக்கொண்டு நகர்ந்து செல்கிறார்கள்,மாதரசிகள்.

அந்தப் பெண்மணியின் புடைவைத் தலைப்பிலும்
பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில்
எடுக்கிறார்--பார்க்கிறார்--வியக்கிறார்.

"இரண்டு காசுகள்...!

என்ன அதிருஷ்டம்! இரண்டு பொற்காசுகள்...!
தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன...?
வேறு யாருக்குத் தெரியும்...?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்,

பெரியவாளிடம் வந்து அடக்க ஒடுக்கமாக நின்றார்.

"என்ன?" என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

"என் புடைவையில் ரெண்டு காசு வந்திருக்கு...
எல்லோருக்கும் ஒண்ணொண்ணுதானே....?
அதான் இண்ணொண்ணை....."

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

"ஒண்ணு உனக்கு..இன்ணொண்ணு உன் வயிற்றில்
இருக்கிற குழந்தைக்கு....!"

அட, அப்படியா?

தான் கருவுற்றிருப்பதைப் பெரியவாளிடம் யாரும்
சொல்லவில்லையே...பெரியவாள் எதிரில்  அரைவிநாடி
நேரம்தானே நின்றிருப்பேன்....

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்குப் பின் இரட்டைக் குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம், பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்குக் கர்ப்பவாசம், சொர்க்கவாசம்!

கணேச-சுப்பராமன்களான இரட்டையருக்கு
பெரியவாதான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிக்கனிகளை
வரவழைத்துக் கொடுத்தார். மகா பெரியவாள்
தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை..போவார்களா, மக்கள்?

சொக்கத் தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ்
பரப்புநர்களாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்
இன்றைக்கும்.

Tuesday, September 26, 2017

ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.

அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.
காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

Sunday, September 24, 2017

மகாப் பெரியவாள் ஒரு Super diplomat! நோவு இல்லாமல் முள்ளை எடுத்துவிடுவார்கள்.

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்
தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி;வானதி பதிப்பகம்.


சின்னஞ்சிறு கிராமம்.நூறு வீடுகள்.

கிராமத்தின் நடுவில் சிறிய சிவன் கோயில்.
கொஞ்சம் சொத்து இருந்தது.பக்கத்து ஊர்
சிவாசாரியார்,தினமும் ஒருகால பூஜை
செய்துவிட்டுப் போவார்.

கிராமம் இரண்டுபட்டுக் கிடந்தது. இரண்டு
வகுப்பாருக்கிடையே மனஸ்தாபம்.

கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா
ஏனோதானோவென்று நடந்தது. கோயிலுக்குச்
சொந்தமான சிறிய தேர் உண்டு.அது கொஞ்சம்
பழுது பட்டிருந்தது.கிராம மக்கள் பிளவு
பட்டிருந்ததால் தேரை செப்பனிட்டு,ஓட்டுவதற்கு
யாரும் முன்வரவில்லை.

ஒரு சாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
அதனால் அவர்களுக்கு உள்ளூர ஓர் அச்சம் 
இருந்துகொண்டே இருந்தது.

அவர்களில் நான்கு நபர்கள் பெரியவாளிடம்
வந்தார்கள்; முறையிட்டார்கள்.

"சாமிதான் அவங்களைக் கூப்பிட்டு புத்தி சொல்லணும்....
எங்க பொம்புள்ளைங்க தனியா நடக்கிறதுக்கே
பயப்படறாங்க..." என்று வேதனையுடன் கூறினார்கள்.
பெரியவாள்,அவர்கள் கூறியதெல்லாவற்றையும்
செவியில் ஏற்றுக்கொண்டார்கள்.பின்னர் கூறினார்கள்.

"ஜாதிச் சண்டையிலே நான் தலையிட முடியாது...
நீங்க குற்றம் சொல்கிற அந்த ஜாதிக்காரர்களும்
தரிசனத்துக்கு வருகிறார்கள். அதனாலே நீங்க
சொல்றது எவ்வளவு நியாயமாக இருந்தாலும்,
நான் ஒரு கட்சிக்கு பரிந்துகொண்டு பேசக்கூடாது.."

இரண்டு நிமிஷம் மௌனம்.

"எனக்கு என்ன தோண்றதுன்னா...எப்படியாவது இந்த
வருஷம் தேரோட்டம் நடத்துங்கோ,சிவாசாரியாரை
வைச்சுண்டு,அந்த கட்சி முக்யஸ்தர்கள்கிட்ட பேசுங்கோ.."

பிரசாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்
அந்தக் கிராம மக்கள்.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர்,எதிர்க்கட்சியினர்
வந்தார்கள்.

பெரியவா,வெறும் அப்பாவியாய், "உங்க ஊர் 
சிவன் கோயில்லே சைத்ரோத்ஸவம் நடக்குமே....
இந்த வருஷம் நடந்ததோ?" என்று கேட்டார்கள்.

பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரிய
மாகவும் இருந்தது. "நம்ம ஊர் திருவிழாவைப் பற்றி
சாமி ஞாபகமா கேட்கிறாங்க"என்று ஆச்சரியம்.

"சாமி தயவில நல்லா நடந்திச்சு..."

"தேர் ஓடித்தோ?"

வந்தவர்களுக்கு ஆனந்தம் தலையை எகிறிக் 
கொண்டு போயிற்று.

"நல்லா ஓடிச்சு......தேர்லே ரிப்பேர் இருந்தது.
செலவு செய்யணும். மேலத்தெரு ஆசாமிங்ககிட்டே
வசதி போறல்லே. தயங்கினாங்க. அட, வடம் புடிக்க
வாங்க; நாங்க செலவு பண்றொம்னு சொன்னோம்.
நல்ல வேளையா ஒத்துக்கிட்டாங்க...அவங்க
இல்லாமல் தேரை ஓட்ட முடியாது.

"ஏன்?"

"வடவண்டை வடக்கயிற்றை அவங்கதான்
புடிக்கணும்...நாங்க தென்னண்டை வடம்...."

"தகராறு பண்ணினானோ?"

அவர்களுக்கு வெட்கிப் போய்விட்டது.

"சின்னப் புள்ளைங்க,ஏதாவது பேசிடுதங்க.
அதனால் அவங்க மனசிலே கொஞ்சம் இது
இருந்துதுங்க...தயங்கிக்கிட்டேதான் கேட்டோம்.
அவங்களும் ஒத்துக்கிட்டாங்க."

"இப்போ அவா மனசிலே இது இருக்கா?"

அதெல்லாம் தேர்ச்சக்கரத்திலே அடிபட்டுப்
போச்சுங்க..."

பெரியவாள் அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு
அவர்களுக்கு மாலை போடச் சொன்னார்கள்.
பிரசாதம் வழங்கினார்கள்.தனியாகப் பிரசாதம்
கட்டச் சொல்லி, வந்தவர்களிடம் கொடுத்து,
"இது மேலத் தெருக்காரர்களுக்கு" என்றார்கள்.
அவர்களும் தயக்கமில்லாமல் வாங்கிக் கொண்டார்கள்.

அந்தக் கிராமத்தில் சில ஆண்டுகளாக, தேர்
ஓடவில்லை.தேரை ஓட்டுவதானால் ஊர் மக்கள்
எல்லோரும்-எல்லா வகுப்பினரும் ஒருமித்து
செயல்பட வேண்டும். 

அப்படி நெருங்கி வரும்போது மனத்திலுள்ள இது
தானாகவே மறைந்துபோகும் சாத்தியக்கூறு உண்டு-
-இதெல்லாம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

மகாப் பெரியவாள் ஒரு Super diplomat!

நோவு இல்லாமல் முள்ளை எடுத்துவிடுவார்கள்.

Saturday, September 23, 2017

""நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்!"

அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி;வானதி பதிப்பகம்.

பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம்.
ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.

அன்றைய தினம் பெரியவாள்,இலேசான' 
விஷயங்களைப் பேசி,அடியார்களை சிரிப்பு
வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று, ஆண்கள் பக்கம் திரும்பி,"உங்களில்
யாருக்கு சமையல் செய்யத் தெரியும் என்று கேட்டார்கள்
அடுக்களைப் பக்கம் எட்டிப் பார்த்திராதவர்கள்
உள்பட,எல்லோரும், 'எனக்குத் தெரியுமே!' என்று
ஒரு குரலாகச் சொன்னார்கள்.

"குழம்பு எப்படிச் செய்வே?" என்று அடுத்த கேள்வி.

முதலில் நின்றவர், ஆரம்பித்தார்; "புளியைக்
கரைத்து, மிளகாய்ப் பொடியும் உப்பும் போட்டு,
நன்றாகக் கொதி வந்ததும் இறக்கணும்."

அடுத்தவர்; முதலில்,கடுகு-மிளகாய் தாளித்துக்
கொள்ளணும்.புளி-உப்பு-மிளகாய்ப்பொடி சேர்த்து,
வெந்த பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும்,
கறிவேப்பிலை-கொத்தமல்லித் தழை போடணும்..."

இன்னொருவர்;"புளி-மிளகாய் இரண்டையும்
அம்மியீல் அறைத்து உப்பு போட்டு, வெந்த பருப்பைச்
சேர்த்து,பெருங்காயம் துளியூண்டு போட்டு
வேக வைக்கணும்..."

.....இப்படியெல்லாம், அதி அற்புதமான முறைகளை
ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தார்கள்.

பின்,பெரியவாள் முறை வந்தது.

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! 
அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

பெரியவாள் என்ன சொல்கிறார்கள்?

"ஜனங்கள் குழம்பிப் போவதற்குக் காரணம்,
தான் என்ற நினைவுதான். நீங்கள் எல்லோரும்
தான் என்ற நினைவே இல்லாதவர்கள்!.
புளி-மிளகாய்-உப்பு-பெருங்காயம் மட்டும் நினைவில்
இருக்கு; தான் என்ற எண்ணமே வரவில்லை.
ஞானிகள் நிலை இதுதானே.

(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)

கயிலால மலையின் அடிவாரத்துக் கற்சிலைகளாக
நின்றார்கள் அடியார்கள்.

Friday, September 15, 2017

My memory is poor - Periyavaa

”ஆமா... இதெல்லாம் என்ன ஞாபகசக்தி?  ஈச்வரனை ஞாபகம் இருக்க மாட்டேண்ரதே...”
--------------------------------------------------------------------------------

 முதிய தம்பதிகளான ஒரு தாத்தாவும் பாட்டியும் பெரியவாளை தரிசிக்க வந்தனர்.

அப்போது மஹாபெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே சாக்கில் அமர்ந்திருந்தார்.

கைகூப்பிக்கொண்டு நின்றிருந்தார்கள் தம்பதியர் அவர் முன்பாக.

பெரியவாள் கேட்டார்கள், ”இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்காத்து வாசல்ல இருந்ததே... இன்னும் இருக்கோ?”

முதியவர் பதிலளித்தார், “அமாம். இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருவது வருஷத்துக்கும் மேல இருக்கும்.  இப்போ பெரிசா வளந்து காச்சுண்டுருக்கு. தெருப்பசஙள் எல்லாரும் கல்லை வீசியெறிந்து வாதாம்பழத்தை பொறுக்கித் தின்றதுகள்.”

பெரியவா தொடர்ந்தார், ”கூடத்துல ஒரு பத்தாயம் இருந்ததே...அதிலே கரையான் அறிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆகிருந்ததே”.

”அத அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு.  அதில்தான் சாப்பாட்டு நெல்லை கொட்டிவச்சுண்ருக்கோம்”

”ஒரு செவப்பு பசுமாடு கன்னு போடறாமாதிரி இருந்துச்சே”

”ஓ.. அது ஆறு கன்னுகள் போட்டுச்சு.  சமீபத்துல தான் தவறிடுச்சு. நல்ல வம்சம்.  கன்றுகள்ளாம் ரொம்ப சௌக்யமாருக்கு.””

”அந்த அய்யங்கார் கணக்குபிள்ள இருந்தாரே?  திருனக்‌ஷத்த்ரம் எண்பதுக்கு மேல இருக்குமோ?”

”சதாபிஷேகத்து ரெண்டு வருஷம் முன்னாலயே வைகுண்டம் போய்ட்டார்.”

”எட்டுகுடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கறதுண்டே... உங்க புத்ராள் யாராவது காவடி எடுக்கறாளா...?”

பெரியவா க்ருபையாலே எட்டுகுடி முருகன் கைங்கர்யம் ரொம்ப நல்லா நடந்துண்ட்ருதுன்க்கு..”

”வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதையம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள்லாம் அந்த அலமாரிலே இருந்ததே... யாராச்சும் படிக்கறாளா...?”

”புஸ்தகங்கள் இருக்கு... ஆனா இப்பல்லாம் யாரும் படிக்கறதுல்லே.”

”ராமாயணம் பாராயணம் செஞ்சுண்ட்ருந்தியே... நடக்கறதோ...?”

”கண் சரியா தெரியரதில்லே...ஒரு சர்க்கம் மாத்ரம் வாசிச்சுண்ட்ருக்கேண்”

பக்கத்துல நின்னு கேட்டுண்ட்ருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாளமுடியலை.  கிராமத்துக்கு எவ்வளவோ வருஷம் முன்னாடி பெரியவா வந்திருந்தப்போ, இவாளாத்துக்கும் விஜயம் செய்து ஒரு மணி நேரம் தங்கியிருந்தார்.  அப்போது பாத்தது, கேட்டதுல்லாம் மனசுல பதிவாகியிருக்குமோ?

பாட்டி சொன்னாள்... “பெரியவாளுக்கு இவ்ளோ ஞாபகசக்தியிருக்கே...?!!”

பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை மாற்றிவிடுமாப்போல், ஒரு உயர்ந்த தத்துவத்தை சொல்லி, கேட்டுண்டுருந்தவாலையெல்லாம் வானத்துல பறக்கவிட்டார்.

”ஆமா... இதெல்லாம் என்ன ஞாபகசக்தி?  ஈச்வரனை ஞாபகம் இருக்க மாட்டேண்ரதே...”

மஹாபெரியவாளின் ஆதங்கமே இப்படி இருக்குமானால்....  நாமெல்லாம் எந்த மூலை..?

கற்கண்டுக்கு இனிப்பைக் கூட்டவேண்டுமா என்ன...?  பெரியவாளுக்கு ஈஸ்வரத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?



Source:  மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்
Narrator:  ஸ்ரீமடம் பாலு மாமா 
Compiler:  ஸ்ரீ கோதண்டராம சர்மா.

Wednesday, September 13, 2017

siva nama mahima in Bhagavatam - Periyavaa

சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்கியம் இது.

‘சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்' 

பரமேஸ்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர்

தெய்வத்தின் குரல்: பாகவதத்தில் சிவ நாம மகிமை

சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மகிமையைத் தீவிர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம். இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன.

விஷ்ணுவின் மகிமைகளை, சரித்திரங்கள் எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே தாக்ஷாயணியின் கதை வருகிறது. 

அந்தக் கதைக்கு நடுவிலேதான் தாக்ஷாயணியின் வாக்கிலேயே சிவ நாமாவின் மகிமையைச் சொல்லியிருக்கிறார் பாகவதத்தை அநுக்ரஹித்துள்ள சுகாசார்யாள்.

அவர் ப்ரஹ்ம ஸ்வரூபம். சுகப்ரஹ்மம் எனப்படுபவர். அவர் சொல்வதற்கு தனி மதிப்பு உண்டு. அவர் இப்படி எடுத்துச் சொல்வதற்கு மூலமாக இந்த மஹிமையைச் சொன்னவளோ தாக்ஷாயணியாக வந்த ஸாஷாத் பராசக்தி. அதுவும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சொன்னாள்?

தகப்பனார் தக்ஷண் யஜ்ஞம் செய்கிறான் என்ற அபிமானத்தால் அவன் அழைக்காமலே அதற்கு வந்தாள், அவனுடைய புத்ரியானதால் தாக்ஷாயணி என்று அழைக்கப்பட்ட தேவி. சதி என்பதுதான் அவளுடைய இயற் பெயர்.

ஹிமவானின் புத்ரியான பார்வதியாக வருவதற்கு முன்னால் அம்பாள் எடுத்த அவதாரம் இது. பரமேஸ்வரன், “அழையா விருந்தாளியாகப் போக வேண்டாம்” என்று நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல் தாக்ஷாயணி தகப்பனாரின் யாகத்துக்கு வந்தாள்.

பரமேஸ்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர். ‘ப்ரஜாபதி' என்று ஜனங்களுக்கு நாயகர்களாக ப்ரம்மா ஸ்ருஷ்டித்த ப்ரம்ம புத்திரர்களில் தக்ஷண் ஒருவன்.

 அவனுக்கு எப்போதும் தன் ஆஃபீஸ், `அதாரிடி` பற்றிய கர்வமுண்டு. எல்லோரும் தனக்கு நமஸ்காரம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பான். மற்றவர்கள் பண்ணவும் பண்ணினார்கள்.

ஈஸ்வரன் பண்ணவில்லை. அதனால் அவரை இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ப்ரம்மாவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு சதியை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவளைக் கைலாசத்துக்கு அனுப்பிவைத்தான். அதோடு பெண் மாப்பிள்ளை உறவைக் கத்தரித்துவிட்டான். பெரிய யாகம் செய்தபோதுகூட ஒரு தேவர் பாக்கியில்லாமல் முப்பத்து முக்கோடி பேரையும் கூப்பிட்டவன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் `இன்வைட்’ பண்ணவில்லை.

யஜ்ஞவாடத்தில் ஈஸ்வரனைத் தவிர அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே மஹா பதிவ்ரதையான தாக்ஷாயணிக்கு “ஏண்டா வந்தோம்?” என்று பொங்கிப் பொங்கிக் கொண்டு வந்தது. 

அதற்கப்புறம் தக்ஷண் அவளை பிரியமாய் வரவேற்காததோடு, சிவ துவேஷமாகவே நிந்தை பண்ணிப் பேச ஆரம்பித்தவுடன் அவளால் துக்கத்தையும் கோபத்தையும் தாங்கவே முடியவில்லை.

இங்கேயிருந்து போய்விடலாமா? போவது என்றால் எங்கே? பதியின் க்ருஹத்தைத் தவிர பத்னிக்கு வேறே இடம் ஏது? அங்கே போகலாமா? ஏன், என்ன யோசனை? போக வேண்டியதுதானே? போனால், 

'நான் சொல்லச் சொல்லப் போய் உனக்கும் அவமானத்தைத் தேடிக்கொண்டு எனக்கும் அவமானம் வாங்கி வைத்துவிட்டு இங்கே ஏன் திரும்பி வந்தாய்?' என்று பரமேஸ்வரர் கோபிப்பாரோ என்பதால் யோசனையா? இல்லை. அவர் அன்பே ஒரு ஸ்வரூபமாக வந்திருப்பவர்.

என்னிடம் பரிவு தவிர எந்த உணர்ச்சியும் காட்டத் தெரியாதவர். அவர் இப்படிக் கேட்க மாட்டார். ஆனால் என் மனசே குத்திக் குத்திக் கேட்கும். இன்னொன்று, அவர் எதுவும் நடக்காதது போல ஹாஸ்யமாக, பரிஹாஸமாக, என்னிடம் சல்லாபம் செய்யும்போதே நடுவில் 'தாக்ஷாயணி' என்று என்னைக் கூப்பிட்டுவிட்டால்? 

அதைவிட ஒரு தண்டனை வேண்டுமா? சிவநிந்தை செய்யும் பாபியின் பெண்ணாயிருப்பதால் ஏற்பட்ட பேரல்லவா அது? அவருடைய நாமம் எத்தனை உத்க்ருஷ்டமானதோ அத்தனை நிக்ருஷ்டமான இவனுடைய பேரைச் சொல்லி, இவனுக்குப் பெண்ணாய் நான் பிறந்தேனென்பதை ஞாபகப்படுத்தும் இந்தப் பேரை நான் வைத்துக்கொள்ள வேண்டியிருப்பதைவிடப் பெரிய தண்டனை இல்லை. 

அதைவிட, இவனால் ஏற்பட்ட இந்த சரீரமே போய்விடட்டும். எங்கே போவது என்று யோசித்தோமே. இந்த சரீரத்தையே விட்டுவிட்டுப் போய் ஆத்மாவாகிய அவரிடம் கலந்துவிடுவோம் என்று தியாக சங்கல்பம் பண்ணிக் கொண்டுவிட்டாள்.

யக்ஞ குண்டத்துக்குப் பக்கத்தி லேயே அம்பாள் ஈஸ்வர த்யானம் பண்ணிக்கொண்டு யோகாக்னியில் சரீரத்தை அர்ப்பணம் செய்து முடித்துப் போய்விட்டாள் என்பது பாகவதக் கதை.

இப்படி பதிவ்ரத்யத்துக்காக, அம்பாள் பிராணத் தியாகம் செய்கிறதற்கு முந்தி கோபாக்னி கொழுந்து விட்டெரிய தக்ஷணைப் பார்த்துக் கொஞ்சம் பேசினதாக பாகவதத்தில் வருகிறது. அதன் நடுவில்தான், ‘சிவன் என்றாலே இவன் கரிக்கிறானே' என்று நினைத்து அவனிடம் அந்த நாம மகிமையை அம்பாள் சொல்வது வருகிறது.

அம்பாள் வாக்கு என்பதாலேயே அதற்கு மிகுந்த ஏற்றம் உண்டு. அதுவும் இந்த சந்தர்ப்பத்திலே சொன்னது என்பதால் இன்னமும் மேலே, இதற்கு மேல் ஒன்றில்லை என்ற உச்சிக்கு அந்த வாக்கு போய்விடுகிறது.

‘சிவேதர` - 'சிவனுக்கு இதரமானவர்'. அதாவது சிவனாக இல்லாமல் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறவர். இப்படி ‘சிவேதரன்' என்று அம்பாள் சொல்வது தக்ஷணைத்தான். சிவத்துக்கு இதரனாக ஒருத்தன் இருக்கிறானென்றால் அவன் ஒரு ச்ரேயஸுமில்லாதவன், அமங்கள, அசுப ஸ்வரூபம் என்றுதானே அர்த்தம்?

‘இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா'. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி ‘நம' சொல்லணு மென்றுகூட இல்லை. அவ்வளவு சிரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும்.

எப்படிச் சொல்ல வேண்டும்? ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக்கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா? ஊஹும், ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது,

 சிவனை நினைத்து, மனசைச் செலுத்தி புத்தி பூர்வமாக, ‘அவன் பேர்' என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும். ‘சிவப்பு அரிசி வடாம்' என்கிற மாதிரி எதையோ சொல்லிக்கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்துவிட்டால் கூடப் போதும் ...

பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் ‘சிவ' என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே சமஸ்த பாபத்தையும் போக்கிவிடும். சத்தியங்களுக்கெல்லாம் மேலான சத்யமாக, ப்ராண தியாக சமயத்திலே சாக்ஷாத் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்கியம் இது.

‘சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்' என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய் விடும் என்றுதானே அர்த்தம்?

தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும் 

அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் சித்தியாகிவிடும். கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் ப்ரபத்தி, ஞான சாதனை எல்லாவற்றையும்விடப் பரம சுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங் களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக்கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாம உச்சாடனம்தான் அது.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top