Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, August 9, 2012

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.
அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, 'கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார்.
அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், 'அம்மா... இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு’ என்று சொல்லி யிருக்கிறார். இவளும், 'பரவாயில்லை... எடுத்துக்கோங்க’ என்றாளாம். உடனே அந்தக் குருக்கள், 'நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறார்கள். 'காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்... அவரை தரிசனம் செய்யுங்கோ’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.
இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கு வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.
உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, 'என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டக் கேளுங்க!’ என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.
அதே நேரம் அந்தப் பெண், 'குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக... பரவசம் பொங்க!
ஆமாம்... காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. 'நம்பினார் கெடுவதில்லை... இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.
அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.
ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?
'என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை... எல்லாம்தான் காரணம்!’ என்றார்'' எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.
''பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால், அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).
பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும், ஒரு நல்ல காரியம், சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலை, அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர், ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!
அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து, 'இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்’ என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா, அந்த பக்தரைக் கூப்பிட்டு, 'இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!' என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.
மகா பெரியவாளுக்கோ, தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல், தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து, பக்தரை மகிழ்வித்த நிம்மதி.
ஆமாம்... மகா பெரியவா எதைச் செய்தாலும், அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.

Tuesday, August 7, 2012

இவருக்கா ஞாபகமறதி?

காஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளுக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர் அன்பர் திரு. சுந்தர ராமமூர்த்தி அவர்கள். ஓவியம் வரைவதைப் பொழுது போக்காகக் கொண்ட அவர்தம் அனுபவத்தை ஒரு நிகழ்ச்சி மூலம் இங்கு கூறுகிறார்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், லூதியானா ஷால் விற்கும் கம்பெனி ஒன்றிலிருந்து எனக்கு ஒரு BOX CAMERA பரிசாகக் கிடைத்தது. முதன்முதலாகப் பெரியவாளையும், புதுப்பெரியவாளையும் போட்டோ பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிலிம் போட்டுக் கொண்டு ஸம்ஸ்கிருதக் கல்லுரிக்குப் போய் விட்டேன். புதுப் பெரியவாளை (ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்) போட்டோ பிடிப்பது எளிதாக இருந்தது.
அனால், பெரியவாளிடம் போன போது, “நீ தான் சைத்ரீகனாயிற்றே; என்னை சித்திரமாக வரை, பிறகு போட்டோ பிடிப்பது பற்றிப் பார்க்கலாம்” என்று கூறி விட்டார். அந்த நிலையில் பெரிதும் ஏமாற்றமாகவே இருந்தது. உற்சாகம் இருக்கவில்லை.
பல ஆண்டுகள் கழிந்தன. எனக்கும் திருமணமாகி விட்டது. ஒருநாள் பழைய சமாச்சாரங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, இதைப் பற்றி பேச்சு எழுந்தவுடன், என் மனைவி, “பெரியவாள் சொல்லியும் நீங்கள் எப்படி அவர் சித்திரத்தைப் போடாது இவ்வளவு நாள் இருந்தீர்கள்” என்று கூறி உடனே ஒரு படத்தையும் போட வைத்தாள். கலைஞனுக்கு முதல் படம்தான் கஷ்டமே தவிர பிறகு உற்சாகம் வந்துவிடும்.
அன்று ஆரம்பித்து இன்று வரை பல ஓவியங்களை அடியேனால் பெரியவாளின் அநுக்ரஹத்தால் போட முடிந்தது. ஒவ்வொரு வருஷமும் போட்ட படங்களையெல்லாம் பெரியவாளிடம் கொடுத்து ஆசிகளைப் பெற முடிந்தது. அனால் போட்டோ பிடிக்க மட்டும் இன்று வரை பெரியவாளின் உத்தரவு கிடைக்கவில்லை.
சென்ற வருஷம் பெரியவாளின் படங்களைக் கொடுக்க காஞ்சிபுரம் போனபோது ஸ்வாமிகளிடம், “இதையெல்லாம் போட்டு வைத்திருக்கிறேனே தவிர இவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. பல பேர் கண்காட்சியாக, காமகோடியின் பெயர் விளங்கும் இடங்களில் வைக்கலாம் என்கிறார்கள். பெரியவாள் உத்தரவு எப்படியோ அப்படியே செய்கிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டேன்.
“செய்யலாமே” என்ற பெரியவாள் பிறகு அதைப் பற்றியே பிரஸ்தாபிக்காமல் வந்திருந்த பக்தர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு அம்மாள், “பெரியவாள் நீங்கள் கேட்டதை மறந்து போய்விட்டார் போலிருக்கு, மறுபடி கேளுங்கள்” என்றார். அது ஸ்வாமிகள் காதிலும் விழுந்திருக்க வேண்டும்.
ஏனெனில் எங்கயோ பின்னால் நின்று கொண்டிருந்த வதந்து (கைம்பெண்) ஆகிவிட்ட ஒரு வயதான அம்மாளைக் கூப்பிட்டு, “நீ வற்றிலைச் சுழியிலே இன்னார் பெண் தானே, ஐந்து வயதாக இருந்தபோது, உன் அப்பாவுடன் வந்திருக்கிறாய். உங்கள் ஊரில் எல்லோரும் சிருங்கேரியைச் சேர்ந்தவர்கள். உங்கள் அப்பா மட்டும் இந்த மடத்துக்கு விசுவாசமாக இருந்தார். உன் பிள்ளை எப்படி இருக்கிறான்? ” என்று விசாரித்தார்.
அந்த அம்மாள் தன் ஐந்தாவது பிராயத்துக்குப் பிறகு மடத்துக்கு அன்றுதான் வந்திருக்கிறார். நெஞ்சுருகிப் போய்விட்டார். “என்னை இந்தக் கோலத்திலும் அடையாளம் கண்டு விசாரிக்கிறாரே! இவருக்கா ஞாபகமறதி வரும் ?” என வியந்தார்.
கடைசியில் அன்று மாலை பெரியவாள் நான் கொண்டு போயிருந்த சித்திரங்களை எல்லாம், காலடி தீர்த்தி ஸ்தம்பத்தில் நிரந்தரக் கண்காட்சியாக வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது, அவர் இந்த சிறியவனையும் எவ்வளவு தன் கருணையால் உயர்த்தினார் என்பதையும், இந்த விஷயத்துக்கு எவ்வளவு தீர்க்கமாக நாளெல்லாம் ஆலோசித்திருக்கிறார் என்பதையும் காட்டியது.
“எதை நினைத்து நாம் ஆசைப் படுகிறோமோ, அதன் சுபாவம் நமக்கும் வந்து சேருகிறது. கடவுளை நினைத்து நாம் தியானம் செய்யும் போது , அந்தப் பரம்பொருளின் பெருமை மிகுந்த குணங்கள் நம்மையும் ஆட்கொள்ளுகின்றன. இதையே நாம் பக்தி என்று சொல்லுகிறோம்”

 

Sunday, August 5, 2012

லோக ஷேமம்

ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப் போனால் இந்தப் பரம்பரையை மறுபடி உண்டு பண்ணவே முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.
‘லோக ஷேமம்’ என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதி கர்மாக் களாலும் ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல. வேதாந்தத்தைப் பார்த்தால்தான் சகல தேசங்களில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னதத் தத்வங்கள் கிடைக்கின்றன. இந்தத் தத்வங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மாபிவிருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று இதர தேசத்தவர் களுக்கு எப்படி நாட்டம் வந்தது? அவர்கள் இங்கே வந்தபோது வேத ரக்ஷணமே ஜீவியப் பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால்தான், இதென்ன, இப்படி ஆயுள் முழுவதையும் அர்ப்பணிக்கும் படியான புஸ்தகம்!" என்று அவர்களுக்கு ஓர் ஆர்வம் பிறந்தது. அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (culture) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்துகொண்டார்கள். லோகத் துக்கெல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத கல்ச்சர்தான் ஆதியில் இருந்தது என்பது என் அபிப்பிராயம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களும் இந்த அபிப்பிராயத்துக்கு வரலாம். எல்லாருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் ஸர்வ மத சமரஸ பாவனை எல்லாம் வந்துவிடுகிறது. அது தவிர, இதன் தத்துவங்களால் எந்த மதஸ்தரும் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முடிகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Friday, August 3, 2012

வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்


எனக்கு விவசாய இலாகா கொடுக்கப்பட்ட நேரமோ, வறட்சியான நேரம். மழையே கிடையாது. நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காஞ்சி மகாசுவாமிகளின் நினைவுதான் வந்தது. காஞ்சிப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காஞ்சி மடத்தில் நுழைந்தேன். அங்குள்ள காரியஸ்தர் திரு. நீலகண்ட அயர் என்னைச் சிறு வயது முதலே அறிந்தவர். அவர் என்னை வரவேற்று, ‘மகாசுவாமிகள், ‘நீ வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது மேடையில் படுத்து அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டார்கள்’ என்றார்.
நான் ‘சற்று தூரத்தில் நின்று, சத்தமில்லாமல் தரிசித்து விட்டுப் போகிறேன்’ என்று, மகாசுவாமிகள் படுத்திருந்த மேடைக்கு எதிரில் போய் நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. மகா சுவாமிகள் சற்றுப் புரண்டு திடீர் என எழுந்து உட்கார்ந்தார்கள். என்னைப் பார்த்ததும், ‘எப்பொழுது வந்தே?’ என்றார்கள். ‘இப்பொழுதுதான் வந்தேன்’ என் றேன். ‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினா?’ என்றார்கள்.
‘நாட்டில் மழையேயில்லை. இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எனக்கு விவசாய இலாகாவைத் தந்துள்ளார்கள். பூமியெல்லாம் வெடித்துக் கிடக்கிறது. மழையில்லாத நாட்டில், எப்படி நல்ல பேரோடு விவசாய அமைச்சராக வாழ முடியும்? என் பேரே கெட்டுவிடும். தாங்கள் யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே வந்தேன்’ என்றேன்.
‘இதற்காகத்தான் வந்தாயா?’ என்றார். ‘ஆம்!’ என்றேன்.
சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக, தியான நிலையில் இருந்தார்கள். சற்று நேரம் கழித்து, ‘நாளைக்கே காமாட்சி அம்மன் கோயிலில், பதினைந்து நாட்களுக்கு யாகம் நடைபெற ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்கள்.
எனக்கு மாலையில் செங்கல்பட்டில் நிகழ்ச்சி. முடித்துக்கொண்டு காரில் ஏறினேன்.
சாப்பிட்டவுடன் வண்டி, ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வண்டி நெளியத் தொடங்கிற்று. சீட்டில் படுத்திருந்த என்னால் தூங்க முடியவில்லை. எழுந்து பார்க்கிறேன். நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். முன் கண்ணாடி மீது குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் மழை கொட்டுகிறது. மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.”
- கே. ராஜாராம், முன்னாள் அமைச்சர்
–நன்றி கல்கி

 

Thursday, August 2, 2012

புறம்’ என்று எடுத்துக்கொண்டால், ரொம்பவும் ஃபிலாஸஃபிகலாக, வேதாந்தமாகப் போகிற போது எல்லாவற்றுக்கும் புறத்தில், வெளியில் இருப்பது சரீரம். அன்னமயகோசம் என்று ஐந்து கோசங்களில் அதைத்தான் ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போனால் என்ன என்று ரொம்பவும் உதாஸீன மாகத்தான் மஹா ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அநேக மஹான்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மல மூத்ராதிகளைப் பூசிக் கொண்டு, புழுத்துப் போன தைத் தின்று கொண்டு, ஸ்நானம் கிடையாது, பல் தேய்க்கிறதில்லை என்று, எங்கேயோ குப்பை கூளத்திலே கிடந்தார்கள் என்று. இதற்கெல்லாம் மாறாக ஒருத்தன் சரீர சுத்தியை இப்படியிப்படி உண்டாக்கிக் கொள்ள வேண்டும். ஆஹாரம் இப்படியிப் படி சுத்தமாயிருக்கணும், அவன் வஸிக்கின்ற இடத்தில் இப்படியாகப்பட்ட சுத்த மான அம்சங்களெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம், ரொம்பவும் ‘புற’த் திலேயிருந்து கொண்டு ஆசார சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது.
இந்த வெளி விஷயங்களில் என்ன கட்டுப்பாடு வேண்டிக் கிடந்தது என்று நாம் இஷ்டப்படி பண்ணினால், எல்லாம் மனஸ் இழுத்துக்கொண்டு போகிறபடி போய், அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்றுதான் முடியும்.
என்றைக்கோ ஒரு நாளாவது நாம் நிஜ மான வேதாந்திகளாக ஆக வேண்டுமா னால், அதற்கு இப்போது நமக்கு இருக்கிற சரீர - குடும்ப - ஸமூஹ அபிமானங்களில் ஆரம்பித்து இவற்றை எப்படி ஆசார ரீதியில் சுத்தப்படுத்திக் கொள்வது என்பதில் கவனம் செலுத்தி அப்படிப் பண்ணிக் கொண்டு போனால்தான் முடியும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top