Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, September 14, 2015

நெஞ்சம் மறப்பதில்லை எஸ்.ராமசுப்பிரமணியன் ஏப்ரல் 02,2014,தினமலர்

அது, 1965ம் ஆண்டு! சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெருவில் வசித்துக் கொண்டிருந்தோம். நான், இந்து உயர்நிலைப்
பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழு ஆண்டுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மறுநாள் மதியம், "சயின்ஸ்' பரீட்சை. படிக்காமல் பிள்ளைகளோடு பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன்
.
வெளியே எங்கேயோ போயிருந்த அப்பா, திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் ஆட்டத்திலிருந்து அம்பேல் ஆகி, மின்னலாய் வீட்டுக்குள் நுழைந்து, விஞ்ஞான புத்தகத்தை பிரித்து அமர்ந்தேன். உள்ளே நுழைந்த அப்பா, "டேய் கிளம்புடா...'என்றார்.
என் வயிற்றில் பந்தாய் பயம் உருண்டது.
அப்போதெல்லாம் அப்பாவுடனோ, அம்மாவுடனோ வெளியே செல்ல வேண்டுமென்றால், கதிகலங்கும். நடத்தித்தான் அழைத்து செல்வர்.
காரணம்: அப்பா செல்வாக்கோடு வீட்டில், "பெட்டி நிறைய பணம் வைத்துக் கொண்டு புழங்கியிருந்த போது நான் பிறந்திருக்கவில்லை. நான் பிறந்த பின், வீட்டில் பெட்டியே இருக்கவில்லை.
சிந்தாதிரிப்பேட்டையில் இருந்தபோது, எழும்பூருக்கு கூட டாக்சியில் செல்லும் வழக்கமுடைய அப்பா, திருவல்லிக்கேணியில் இருந்து அடையாறுக்கும், மாம்பலத்திற்கும் கூட நடந்தே சென்று திரும்புவது உண்டு. அந்த நேரத்தில் பஸ் பயணம் என்பது, எங்களுக்கு பிரமிப்பூட்டும் விஷயம்
.
சாதாரண சாயாக்கடை வைத்து படிப்படியாய் முன்னேறி, ஸ்டார் ஓட்டல் வைத்தவர்கள் வரலாற்றை வாசித்து இருக்கிறேன். ஒன்றன் பின், ஒன்பது ஓட்டல்கள் வைத்தும் உருப்படாமல் ஓட்டாண்டியான, அப்பாவின் வரலாற்றை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன். அப்பாவின் ஓட்டல்களில், காசு கொடுத்து சாப்பிட்டு போனவர்களை விட, ஓசியில் சாப்பிட்டு போனவர்களே அதிகம்.
அப்பா, "டேய் கிளம்புடா...'என்றதும் புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, "எங்கே?' என்று தைரியமாக கேட்டுவிட்டேன். ஆனாலும், உதறலெடுத்துக் கொண்டுதான் இருந்தது. அப்பா என்னை உக்கிரப்பார்வை பார்த்தார். "போற எடம் தெரியலேன்னா வரமாட்டியோ?' என்று கோபமாகக் கேட்டார். அவரது பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல், "இல்லை... பரீட்சை...
படிக்கணும்...'என்று இழுத்தேன். "நீ பரீட்சைக்கு படிச்சுண்டிருந்த லட்சணத்தை பார்த்துண்டுதானே வந்தேன். கிளம்புடான்னா...' என்று ஒரு அதட்டல் போட்டார்.
பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். நாற்பத்தைந்து நிமிட நடையில் நாங்கள் எழும்பூர் ஹால்ஸ் சாலையை எட்டி இருந்தோம். பேபி ஆஸ்பிடலுக்கு எதிரிலிருந்த, "மினர்வா டுடோரியல்ஸ்' வளாகத்துக்குள் நுழைந்த போதுதான், காஞ்சி மாமுனிவர், பெரியவர், பரமாச்சாரியர், ஜகத்குரு ஸ்ரீசந்திரகேகர சரஸ்வதி சுவாமிகள், அங்கு முகாமிட்டிருப்பது எனக்குத் தெரிய வந்தது.
என் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு பிரவகிக்க ஆரம்பித்தது. உற்சாகத்திற்கு காரணம் பெரியவாளை தரிசித்தால், அவரிடம், ஆசி பெற்றுக் கொள்வதோடு, அங்கேயே சாப்பாடும் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். ஓட்டல் நடத்தி, வந்தவன் போனவனுக்கெல்லாம் ஓசியிலேயே சாப்பாடு போட்டு அனுப்பிய அப்பா , எனக்கு ஒருவேளை சாப்பாட்டையாவது திருப்தியாய் சாப்பிட வைப்போம் என்று, வியர்க்க விறுவிறுக்க, வெயிலில் நடத்தி அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் மனசு கனத்துப்போகிறது.
அப்பா தோளிலிருந்த துண்டை எடுத்துக் இடுப்புக்குக் கொடுத்தார். நானும் சட்டையை அவிழ்த்து இடுப்பில் சுற்றிக் கொண்டேன்.
அப்பாவும், நானும் சுவாமிகள் அருள் பாலித்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்று, தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.
பரமாச்சாரியார் அப்பாவை பார்த்தார். அடியேனையும் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டு, ஒரு நிமிடம் தியானித்தார்.
சன்னிதானத்தின் முன் கைக்கட்டி நின்றிருந்த போதிலும், சமையலறையிலிருந்து புறப்பட்டு காற்றில் கலந்து வீசிக் கொண்டிருந்த நறுமணம், என் நாசியை தாக்கி, வசீகரித்து அழைத்துக் கொண்டிருந்தது.
பெரியவாள் கண்களை திறந்து அப்பாவைப் பார்த்தார்."பிள்ளையாண்டனுக்கு இன்னும் பிரம்மோபதேசம் செய்யலியா?' என்று கேட்டார்.
"இன்னும் வேளை வரவில்லை...' என்றார் அப்பா தயக்கத்தோடு!
"வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெருமடத்துல போய் போட்டுடுங்கோ...' என்று திருவாய் திறந்து உத்தரவிட்டார். அப்பா என்னை அழைத்துக்கொண்டு, அடுத்த அறையிலிருந்த ஸ்ரீமடத்தின் மேனேஜரை அணுகினார்.
எனக்கு "உபநயனம் (பூணூல்) செய்து வைப்பது குறித்து அப்பா ஐந்தாண்டுதிட்டமே தயாரித்து வைத்திருந்தார். அப்பா இருந்த நிலையில், அவரது பிளானை ராத்திரி கனவில் மட்டுமே நிறைவேற்றி வைக்கமுடியும்! ஆனாலும், அப்பா, மேனேஜரிடம், தன் ஆதங்கத்தையும், பெரியவர்களின் ஆசியை ஏற்று, மறுநாள் பிரம்மோபதேசம் செய்து, தன் தன்மானம் தடுப்பதையும் எடுத்துரைத்தார். கூட நாளை நான் பரீட்சை எழுத வேண்டியிருப்பதையும் கூறினார். "பரீட்சை எப்போ?' என்று கேட்டார்
மேனேஜர் என்னிடம். நான் மத்தியானம் இரண்டு மணிக்கு என்றேன், பெரியவா சொன்னா, அதுல விஷயம் இருக்கும். பையனைப் பரீட்சை எழுத வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க வீணா விவாதம் பண்ணிண்டு இருக்காம, சாயரட்சை குடும்பத்தோட மடத்துக்கு வந்து சேர்ந்துடுங்கோ, என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதற்கு மேல், அவரிடமும் எதுவும் பேச முடியவில்லை.
மறுநாள் திங்கட்கிழமை. அப்பா அம்மா நான் ஆகிய மூன்றே பேர்களோடு, நான்காம் பேருக்குத் தெரியாமல், மயிலாப்பூர் சித்திரைக் குளத்தெரு, சங்கர மடத்தில் பரமாச்சாரியாரின் அருளோடும், சகல வைதீக சடங்குகளோடும், எனக்கு பிரம்மோபதேசம் நடந்து முடிந்தது. மதியம் நான், பரீட்சைக்கு எழுத பள்ளிக்கூடம் போக மடத்திலிருந்து வாகனம் ஏற்பாடு செய்து தந்தனர்.
பரீட்சை எழுதி திரும்பி வந்த என்னையும், என்னோடு உபநயனம் நடந்த ஐந்து பேரையும், "புரசைவாக்கம் தர்மபிரகாஷ்' திருமண மண்டபத்தில் முகாமிட்டிருந்த பரமாச்சாரியாரிடம் அழைத்துச் சென்றனர்.
உடன் வந்திருந்த ஸ்ரீமடத்து சாஸ்திரிகள், "அபிவாதயே...' என்று துவங்கும் நமஸ்கார மந்திரம் சொல்லித்தர, நாங்கள் அறுவரும் அதைத் திருப்பிச் சொல்லி, சுவாமிகளை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினோம்.
மந்திரத்தின் கடைசி வாரிசுகளான, "ராமசுப்ரமணிய சர்மா அஸ்மீபோஹோ' என்பதைச் சொல்லிவிட்டு, ஆறு பேருக்கும் நடுநாயகமாக நின்றிருந்த நான், எனக்கு மிகச் சரியாக எதிரிலிருந்த பரமாச்சாரியாரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டேன்.
பாதங்களில் ஸ்பரிசம் பட்டதும், பரமாச்சாரியாரின் தேகம் சட்டென்று சிலிர்த்தது. வணங்கி எழுந்த என் தலையில், "நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தேன்.......அப்பா! அப்பா என்னை குட்டியதை சுவாமிகள் பார்த்துவிட்டார். "குழந்தையை வையாதீங்கோ, தெரியாம தொட்டுடுத்து...' என்றபடி என்னை அழைத்து அருகே அமர்த்தி குட்டுப்பட்ட இடத்தில், தன் பட்டுக்கரங்களால் தொட்டுத் தடவி ஆசிர்வதித்து வழியனுப்பிவைத்தார். அடுத்த பதினைந்தாவது மாதம், அப்பா செத்துப்போனார். அப்பாவை தகனம் செய்துவிட்டு திரும்பிய அன்று, அம்மா என்னை அருகே அழைத்தார். என் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த பூணூலை தொட்டுப் பார்த்தார். "உனக்கு பிரம்மோபதேசம் ' நடந்ததுக்கு மொதநாள் பெரியாவளைப் பார்க்க போய் இருந்தியே... அங்கே என்ன நடந்ததுன்னு சொல்லு...' என்றார். நான் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னேன்.
அப்பாவின் அத்தியாயம் அஸ்தமிக்கப் போறதுன்னு உனக்கும், எனக்கும் தாண்டா தெரியலை. பராமாச்சாரியரோட ஞானதிருஷ்டியில், ஒண்ணேகால் வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சிருக்குடா...' என்று சொல்லி, அழ ஆரம்பித்தார்
நான் புரியாமல், அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா அழுகையை நிறுத்திவிட்டு தொடர்ந்து சொன்னார்...
"வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு கர்மம் செய்ய வேண்டிய வேளை வந்தாச்சுன்னு அர்த்தம்டா. அன்னிக்கு மட்டும் பெரியவா பிடிவாதமா உனக்கு, "பிரம்மோபதேசம்' செய்து வெக்கலேன்னா, உனக்கு உபநயனம் முறையா நடக்காமயே போயிருக்கும். இன்னிக்கு உங்கப்பாவை நீ தகனம் செய்றதுக்கு முன்னால சுடுகாட்டுலேயே, "காட்டுப்பூணல்' போட்டு வெச்சிருப்பா. காலத்துக்கும், உன் உடம்புல அந்த காட்டுப் பூணல் தான் ஊஞ்சலாடிண்டு இருந்திருக்கும்...' என்று அம்மா விவரமாக விளக்கிய போது, மெய்சிலிர்த்தது எனக்கு. நடமாடும் தெய்வமாய் இருந்து, அருளாசி வழங்கிக் கொண்டிருந்த பரமாச்சாரியாரின் ஞான திருஷ்டியை, இப்போது நினைத்துப் பார்த்தாலும் புல்லரிக்கிறது மனது!

Source: Shri. Mannargudi Sitaraman Srinivasan

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top